ரமளான் இரவு வணக்கங்கள்

புனித ரமளானில் நின்று வணங்குவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள். இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. ஆயினும் ரமளானில் தொழுவதற்கென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரத்தியேகமான வணக்கம் எதனையும் கற்றுத் தரவில்லை. அவர்களும் பிரத்தியேகமான எந்த வணக்கத்தையும் செய்யவில்லை.

ரமளானில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது? என்று ஆயிஷா (ரலி) இடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமளானிலும் ரமளான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழுததில்லை என்று விடையளித்தார்கள்.அறிவிப்பவர்: அபூ ஸலமாநூல்: புகாரி 1147, 2013, 3569

ரமளானில் விசேஷமான தொழுகை ஏதும் உண்டா? என்பதை அறிந்து கொள்வதற்காக அபூஸலமா அவர்கள் கேள்வி கேட்கிறார்கள். ரமளானுக்கென்று விசேஷமாகத் தொழுகை ஏதும் இல்லை என்று ஆயிஷா (ரலி) விடையளிக்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இரவு வணக்கத்தை அவர்களின் மனைவியர் தவிர மற்றவர்கள் அதிகம் அறிய முடியாது.

ரமளான் அல்லாத நாட்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுது வந்த ரக்அத்களையே ரமளானிலும் தொழுது வந்தார்கள். அதைத் தவிர மேலதிகமாக எந்தத் தொழுகைகளையும் தொழுததில்லை என்பதை இதன் மூலம் அறியலாம்.

தராவீஹ் என்ற பெயரில் 20 ரக்அத்கள் தொழும் வழக்கம் பரவலாக உள்ளது.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், பல்லாயிரக்கணக்கான ஹதீஸ்கள் இருந்தும் ஒரேயொரு ஹதீஸில் கூட தராவீஹ் என்ற வார்த்தையே இடம் பெறவில்லை. அல்லாஹ்வின் தூதருடைய வாயிலிருந்து இந்த வார்த்தை கூட வெளிப்பட்டதற்கு ஆதாரமில்லை.

இந்த வார்த்தையே ஹதீஸ்களில் இல்லை எனும் போது இது நாமாகக் கண்டுபிடித்த தொழுகை என்பதையும், மார்க்கத்திற்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதையும் அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமளானிலும் ரமளான் அல்லாத மாதங்களிலும் தொழுத தொழுகை தஹஜ்ஜுத், இரவுத் தொழுகை என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்மைகளை அதிகமதிகம் அள்ளித் தரக் கூடிய புனிதமிக்க மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தராத நடவடிக்கைகளில் இறங்குவதற்கு அதிகமாக அஞ்ச வேண்டும்.

இது தஹஜ்ஜுத் தொழுகை பற்றியதாகும்; தஹஜ்ஜுத் தொழுகை அல்லாத வேறு தொழுகையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதிருப்பார்கள் என்று சிலர் விளக்கம் கூறுகின்றனர்.

ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியே ரமளான் தொழுகை பற்றித் தான். கூரிய மதி படைத்த அவர்கள் ரமளானில் விசேஷத் தொழுகை கிடையாது என்று திட்டவட்டமாக அறிவித்த பின் இவர்களின் வாதம் ஏற்கத்தக்கது தானா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

இந்தப் பதினொரு ரக்அத்கள் அல்லாத வேறு தொழுகைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதிருக்கலாம் என்போர் அதற்கான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். எவ்வித ஆதாரமுமின்றி எழுப்பப்படும் இந்த வாதத்தை நாம் மதிக்க வேண்டியதில்லை. ரமளானுக்கு என்று தனியான தொழுகை இல்லை என்பதற்கு மேலும் பல சான்றுகளும் உள்ளன.

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ரமளானில் நோன்பு நோற்றோம். ரமளானில் ஏழு நாட்கள் மீதமிருக்கும் வரை எங்களுக்குத் தொழுகை நடத்தவில்லை. இருபத்தி மூன்றாம் நாள் இரவில், மூன்றில் ஒரு பகுதி நேரம் வரை எங்களுக்குத் தொழுவித்தார்கள். அதன் பிறகு (சில நாட்கள்) தொழவில்லை. ரமளானில் மூன்று நாட்கள் எஞ்சியிருக்கும் போது மீண்டும் எங்களுக்குத் தொழுவித்தார்கள். தம் குடும்பத்தினரையும், மனைவியரையும் அதில் பங்கெடுக்கச் செய்தார்கள். ஸஹர் நேரம் முடிந்து விடுமோ என்று நாங்கள் அஞ்சும் அளவுக்கு நீண்ட நேரம் தொழுவித்தார்கள். அறிவிப்பவர்: அபூதர் (ரலி) நூல்: நஸயீ 1347, 1587, 1588

ஸஹர் தவறி விடுமோ என்று அஞ்சும் அளவுக்கு அவர்கள் தொழுகை நடத்தியுள்ளார்கள். இஷா முதல் ஸஹர் வரை அவர்கள் ஒரு தொழுகையைத் தான் தொழுதிருக்கிறார்கள். அதாவது தஹஜ்ஜுத் தொழுகையையே தொழுதுள்ளார்கள். ரமளானுக்கென்று தனியாக ஒரு தொழுகையை அவர்கள் தொழவில்லை என்பதை இது தெளிவாக விளக்குகிறது.

நான் உமர் (ரலி) அவர்களுடன் ரமளான் மாதத்தின் ஓர் இரவில் பள்ளிவாசலுக்குச் சென்றேன். அங்கே மக்கள் பிரிந்து பல குழுக்களாக இருந்தனர். சிலர் தனித்துத் தொழுது கொண்டிருந்தனர். சிலரைப் பின்பற்றி சிறு கூட்டத்தினர் தொழுது கொண்டிருந்தனர். அப்போது உமர் (ரலி) அவர்கள், இவர்கள் அனைவரையும் ஓர் இமாமின் கீழ் திரட்டினால் அது சிறப்பாக அமையுமே என்று கூறி விட்டு, அந்த முடிவுக்கு உறுதியாக வந்து, மக்களை உபை பின் கஅபு (ரலி) அவர்களுக்குப் பின்னால் திரட்டினார்கள். பின்னர் மற்றொரு இரவில் நான் சென்றேன். மக்களெல்லாம் தங்கள் இமாமைப் பின்பற்றித் தொழுது கொண்டு இருந்தார்கள். அப்போது உமர் (ரலி), இந்தப் புதிய ஏற்பாடு நன்றாக இருக்கிறது. இப்போது தொழுது விட்டுப் பிறகு உறங்குவதை விட, உறங்கி விட்டு இரவின் இறுதியில் தொழுவது மிகவும் சிறந்ததாகும் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் அப்துல் காரீ நூல்: புகாரி 2010

உமர் (ரலி) அவர்களின் இந்தக் கூற்றும் ரமளானுக்கு என்று விசேஷத் தொழுகை கிடையாது என்பதை அறிவிக்கின்றது. இப்போது தொழுது விட்டுப் பிறகு உறங்குவதை விட, உறங்கி விட்டு இரவின் இறுதியில் தொழுவது மிகவும் சிறந்தது என்ற அவர்களின் கூற்றிலிருந்து இதை விளங்கலாம். இரவில் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே தொழுகை தான். ஆரம்ப நேரத்தில் ஒரு தொழுகை, இரவின் கடைசி நேரத்தில் ஒரு தொழுகை என்று இரண்டு தொழுகைகள் கிடையாது என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.

மேற்கண்ட ஹதீஸில் உமர் (ரலி) அவர்கள் உபை பின் கஅபு (ரலி) அவர்களை இமாமாக நியமித்ததாகக் கூறப்படுகின்றது. சற்றுக் கூடுதல் விபரத்துடன் மற்றொரு ஹதீஸில் பின்வருமாறு கூறப்படுகின்றது.

உபை பின் கஅபு (ரலி) அவர்களையும், தமீமுத்தாரி (ரலி) அவர்களையும் மக்களுக்குப் பதினோரு ரக்அத்கள் தொழுவிக்குமாறு உமர் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள். நூல்: முஅத்தா 232 அப்படியானால் ரமளானுக்குரிய சிறப்பு என்ன? என்ற கேள்வி எழலாம். எல்லா நாட்களிலும் இந்தத் தொழுகையைத் தொழ வேண்டும் என்றாலும் ரமளானில் இந்தத் தொழுகைக்கு அதிக அளவு ஆர்வமூட்டப்பட்டுள்ளது. யார் ரமளானில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் தொழுகிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்ற கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன.

இது போன்ற ஹதீஸ்கள் யாவும் ரமளானில் நின்று வணங்குவதற்கு ஆர்வமூட்டுகின்றன. நின்று வணங்குவது என்றால் நபியவர்கள் எவ்வாறு நின்று வணங்கினார்களோ அவ்வாறு வணங்குவதையே அது குறிக்கும். நபியவர்கள் பதினொரு ரக்அத்களே நின்று வணங்கியுள்ளதால் அதையே நாமும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

சில சமயங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 4+5 ரக்அத்கள் தொழுததற்கும் ஆதாரம் உள்ளது. நூல்: புகாரி 117, 697

சில சமயங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 12+வித்ர் தொழுததற்கும் ஆதாரம் உள்ளது. நூல்: புகாரி 183, 992, 1198, 4571, 4572

சில சமயங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வித்ருடன் சேர்த்து 13 ரக்அத்கள் தொழுததற்கும் ஆதாரம் உள்ளது. நூல்: முஸ்லிம் 1284

சில சமயங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 7 ரக்அத்கள் அல்லது 9 ரக்அத்கள் தொழுததற்கும் ஆதாரம் உள்ளது. நூல்: புகாரி 1139

சில சமயங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வித்ருடன் சேர்த்து 9 ரக்அத்கள் தொழுததற்கும் ஆதாரம் உள்ளது. நூல்: முஸ்லிம் 1201

சில சமயங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 8+5 ரக்அத்கள் தொழுததற்கும் ஆதாரம் உள்ளது. நூல்: முஸ்லிம் 1217

சில சமயங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 10+1 ரக்அத்கள் தொழுததற்கும் ஆதாரம் உள்ளது. நூல்: முஸ்லிம் 1222

சில சமயங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 9 ரக்அத்கள் தொழுததற்கும் ஆதாரம் உள்ளது. நூல்: முஸ்லிம் 1201

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 20 ரக்அத்கள் தொழுததற்கு எந்த ஆதாரமும் இல்லை.

இரவுத் தொழுகையின் நேரம்

இரவுத் தொழுகையின் நேரம் இஷா முதல் சுபுஹ் வரையிலுமாகும். இரவின் கடைசி நேரத்தில் தான் தொழ வேண்டும் என்று சிலர் கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்தே இதை நாம் அறிந்து கொள்ள இயலும்.

தனியாகவும் தொழலாம்; ஜமாஅத்தாகவும் தொழலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையை ஒரு ரமளானில் மூன்று நாட்கள் மட்டுமே ஜமாஅத்துடன் தொழுதுள்ளார்கள். இதனால் மூன்று நாட்கள் மட்டுமே ஜமாஅத்தாகத் தொழ வேண்டும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் மூன்று நாட்களுக்குப் பிறகு ஜமாஅத்தை விட்டு விட்டதன் காரணத்தை அவர்களே விளக்கியுள்ளார்கள்.

இத்தொழுகை கடமையாகி விடுமோ என்று அஞ்சியே நான்காம் நாள் ஜமாஅத் தொழுகை நடத்தவில்லை என்பதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய காரணம். இந்தக் காரணம் இல்லாவிட்டால் ஜமாஅத்துடன் தொழ எந்தத் தடையும் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்துக்குப் பின் எதுவுமே கடமையாக முடியாது என்பதால் எல்லா நாட்களும் ஜமாஅத்தாகத் தொழலாம். இது நபிவழிக்கு மாற்றமானதல்ல!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வீட்டில் இரவுத் தொழுகை தொழும் போது அவர்களைப் பின்பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) தொழுதுள்ளார்கள். இது புகாரி (183, 117, 138, 697, 698, 726, 859) உள்ளிட்ட பல நூல்களில் இடம் பெற்றுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் இதனைத் தனியாகவும் தொழுதுள்ளனர். மேலும் ஜமாஅத்தை இதற்கு வலியுறுத்தவில்லை என்பதால் தனியாகவும் தொழலாம்.

தவறான கருத்துக்கள்

* இரவுத் தொழுகை எட்டு ரக்அத்கள், வித்ரு மூன்று ரக்அத்கள் தொழுவதற்குப் பதிலாக 20 ரக்அத்களும், வித்ரு மூன்றும் தொழுவது.

* ஒவ்வொரு இரண்டு ரக்அத்களுக்கு இடையில் குறிப்பிட்ட சில திக்ருகளைக் கூறுவது.

* இந்தத் தொழுகையில் முழுக் குர்ஆனையும் ஓதியாக வேண்டும் என்று நம்புவது; நிறுத்தி நிதானமாக ஓதாமல் அவசரம் அவசரமாக ஓதுவது.

* சபீனா என்ற பெயரில் ஒரே இரவில் குர்ஆன் முழுவதையும் ஓதி குர்ஆனுடன் விளையாடுவது.

* தமாம் செய்தல் என்ற பெயரில் தொழுகையில் இல்லாத வாசகங்களை தொழுகையில் சேர்ப்பது.

* கூலிக்காக ஹாபிழ்களை அமர்த்தி குர்ஆனை அற்பக் கிரயத்துக்கு வாங்குவது; விற்பது.

இந்த வழக்கங்கள் அனைத்தும் தவிர்க்கப்பட வேண்டியவையாகும். இவற்றுக்கு நபிவழியில் ஆதாரமோ, அனுமதியோ இல்லை.

லைலத்துல் கத்ரு இரவு

ரமளான் மாதத்தில் ஓர் இரவு உள்ளது. அந்த ஓர் இரவானது ஆயிரம் மாதங்களை விடச் சிறப்பானதாக அமைந்துள்ளது.

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. அல்குர்ஆன் 97:1-3

இந்த மகத்துவமிக்க இரவு இது தான் என்று வரையறுத்து, குர்ஆனிலோ, ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலோ கூறப்படவில்லை. ஆனாலும் ரமளான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படை இரவுகளில் அந்த இரவு அமைந்திருக்கலாம் என்பது தான் ஹதீஸ்களிலிருந்து பெறப்படும் உண்மையாகும்.

லைலத்துல் கத்ரை ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படை இரவுகளில் நீங்கள் தேடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 2017, 2020

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களிடம் வந்தார்கள். அப்போது இரண்டு மனிதர்கள் வழக்காடிக் கொண்டிருந்தனர். அதை நான் மறந்து விட்டேன். எனவே அதை 27, 29, 25 ஆகிய நாட்களில் தேடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி) நூல்: புகாரி 49, 2023, 6049

குறிப்பிட்ட இரவு லைலத்துல் கத்ர் என்று சில ஹதீஸ்கள் வந்திருந்தாலும் கடைசிப் பத்து நாட்களில் ஏதேனும் ஒரு இரவாக அது இருக்கும் சாத்தியம் உள்ளது என்று இந்த ஹதீஸ்கள் கூறுவதால் இந்தப் பத்து நாட்களும் அதற்காக முயற்சிப்பதே சிறப்பானதாகும்.

லைலத்துல் கத்ரின் அமல்கள்

லைலத்துல் கத்ர் இரவுக்கென்று விசேஷமான தொழுகையோ, வணக்கமோ ஹதீஸ்களில் காணப்படவில்லை. ஆயினும் கடைசிப் பத்து நாட்களும் பள்ளிவாசலிலேயே தங்கியிருக்கும் இஃதிகாஃப் எனும் வணக்கத்தை நபியவர்கள் செய்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள். அவர்களுக்குப் பின் அவர்களின் மனைவியர் இஃதிகாஃப் இருந்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 2026

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்க நாடினால் சுபுஹ் தொழுது விட்டுத் தமது இஃதிகாஃப் இருக்குமிடம் சென்று விடுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 2041

ஒற்றை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதை முன்பே அறிந்தோம். எனவே ஃபஜ்ரு தொழுதவுடன் இஃதிகாஃப் இருக்கத் துவங்குவார்கள் என்பது 21ஆம் நாள் ஃபஜ்ராக இருக்க முடியாது. அப்படி இருந்தால் அந்த இரவு அவர்களுக்குத் தவறிப் போயிருக்கும். 20ம் நாள் ஃபஜ்ரு தொழுது விட்டு இஃதிகாஃப் இருப்பார்கள் என்று விளங்குவதே பொருத்தமாகத் தெரிகின்றது.

ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருக்க அவர்கள் நாடிய போது அதற்கென கூடாரம் அமைக்க உத்தரவிட்டார்கள். அவ்வாறே அமைக்கப்பட்டது.

இது முந்தைய ஹதீஸின் தொடராகும்.

பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருப்பதற்காகக் கூடாரம் அமைத்துக் கொள்ளலாம் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது. ஆயினும் இது பொதுவான அனுமதியல்ல. அல்லாஹ்வின் தூதருக்கு மட்டுமே உரியதாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை இந்த ஹதீஸின் அடுத்த பகுதி விளக்குகின்றது.

உடனே ஸைனப் (ரலி) அவர்கள் ஒரு கூடாரம் அமைக்க உத்தரவிட்டார்கள். அது அமைக்கப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியரில் மற்றும் சிலரும் அவ்வாறு உத்தரவிட்டனர். அவ்வாறே அமைக்கப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபஜ்ரு தொழுது விட்டுப் பார்த்த போது பல கூடாரங்கள் போட்டிருப்பதைக் கண்டார்கள். அப்போது அவர்கள், இவர்கள் நன்மையைத் தான் நாடுகிறார்களா? என்று கேட்டு விட்டுத் தமது கூடாரத்தைப் பிரிக்குமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே பிரிக்கப்பட்டது. ரமளான் மாதம் இஃதிகாஃப் இருப்பதை விட்டு விட்டு ஷவ்வாலின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்.

இதுவும் இந்த ஹதீஸின் தொடராகும்.

இவர்கள் நன்மையை நாடுகிறார்களா? என்ற கேள்வியும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கூடாரத்தையே பிரித்து விட்டு, இஃதிகாஃபை விட்டதும் இவ்வாறு பரவலாகக் கூடாரங்கள் அமைப்பதில் அவர்களுக்கு இருந்த அதிருப்தியையே காட்டுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளியில் இஃதிகாஃப் இருக்கும் போது நான் வீட்டில் மாதவிடாயாக இருந்து கொண்டே அவர்களது தலையை வாரி விடுவேன். அவர்கள் தமது தலையை வீட்டுக்குள் நீட்டுவார்கள். மனிதனின் அவசியத் தேவைக்காக (மலஜலம் கழித்தல்) தவிர வீட்டிற்குச் செல்ல மாட்டார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 2029

இஃதிகாஃப் இருக்கும் போது தலை வாரிக் கொள்ளலாம்; மனைவியைத் தொடலாம் என்பதை இதிலிருந்து விளங்க முடிகின்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். இரவில் அவர்களைச் சந்திக்க நான் சென்றேன். அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். பின்னர் நான் புறப்படுவதற்காக எழுந்தேன். என்னை வீட்டில் விடுவதற்காக அவர்களும் எழுந்தார்கள். அறிவிப்பவர்: அன்னை ஸபிய்யா (ரலி) நூல்: புகாரி 2035, 2038, 3101, 3281

மனைவி பள்ளிக்கு வந்து இஃதிகாஃப் இருக்கும் கணவருடன் பேசலாம் என்பதை இதிலிருந்து அறியலாம்.

இந்த ஹதீஸிலிருந்து நபியவர்கள் பள்ளியை விட்டு வெளியே சென்று மனைவியை வீட்டில் விட்டு வந்தார்கள் என்று அர்த்தம் செய்து கொள்ளக் கூடாது. அவர்களின் வீடு பள்ளிவாசலுக்குள் புகுந்து செல்லும் விதமாகப் பள்ளியை ஒட்டி அமைந்திருந்தது. எனவே பள்ளியிலிருந்த படியே மனைவியை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள் என்றே விளங்க வேண்டும்.

இஃதிகாஃப் இருப்பவர் நோயாளியை விசாரிக்காமல் இருப்பதும், ஜனாஸாவில் பங்கெடுக்காமல் இருப்பதும், மனைவியைத் தீண்டாமலும், அணைக்காமலும் இருப்பதும், அவசியத் தேவையை முன்னிட்டே தவிர வெளியே செல்லாமல் இருப்பதும் நபிவழியாகும். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: அபூதாவூத் 2115

இஃதிகாஃப் இருப்பவர்கள் இந்த ஒழுங்குகளைப் பேணிக் கொள்ள வேண்டும்.

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.